கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் அளித்தது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், குழிதுறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் விமானப் பணியாளர் பட்டயப் படிப்பு படித்து வந்த அந்த இளம்பெண்ணுடன், அதே வகுப்பில் பயின்ற களியக்காவிளையைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அப்பாடப்பிரிவில் அவ்விருவர் மட்டுமே பயின்றதால் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, சிறுவனின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவனது வீட்டிற்குச் சென்ற இளம்பெண், சிறுவனை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக எட்டு மாத கர்ப்பிணியாக மாறிய அவர், இதனை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளம்பெண் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால் தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
