தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன.
தமிழ் திரையுலகில் பாலுமகேந்திராவின் திறமையை முதலில் அறிந்தவர்களில் ஒருவர் கமல்ஹாசனும் ஒருவர். தான் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய ஒரு படத்துக்கு தற்காலிக ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா வந்த போது அவரின் வேலை செய்யும் பாணியை பார்த்து வியாந்து, அவரோடு மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருந்ததாக பின்னர் ஒருமுறை கூறியுள்ளார்.
அதே பாலு மகேந்திரா முதல் முறை இயக்குனர் அவதாரம் எடுத்த கோகிலா படத்தில் கதாநாயகனாக நடித்ததும் கமல்ஹாசன். அவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்த மூன்றாம் பிறை திரைப்படம் இன்றளவும் திரைப்பட ரசிகர்களால் சிலாகிக்கப்படும் ஒரு படமாக உள்ளது.
இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். யாரிடமும் பணம் கடன் கேட்க விரும்பாதவரான பாலு மகேந்திரா வேறு வழியில்லாமல் கமலிடம் கேட்கலாம் என முடிவு செய்துள்ளார்.
கமல் அலுவலகத்துக்கு வந்த பாலு மகேந்திராவை உற்சாகமாக வரவேற்று அமரச் சொன்னார் கமல். பாலுமகேந்திரா, தான் பணம் கேட்க வந்திருக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் முன்… உலக சினிமாக்கள் பற்றி சுவாரசியமாக பேச ஆரம்பித்துள்ளார் கமல். பாலு மகேந்திராவும் அவரோடு பல மணிநேரம் சினிமா பற்றி பேசியுள்ளார்.
ஆனாலும் பாலுமகேந்திராவின் மனதுக்குள் எப்போது எப்படி பணத்தை கேட்பது என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது கமல் பேச்சை நிறுத்திவிட்டு “அடடே… பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. நான் ஷூட்டிங் போக வேண்டுமே..! கொஞ்சம் இருங்கள், வந்துவிடுகிறேன்.” எனக் கூறியுள்ளார். பாலு மகேந்திராவும் அவரிடம் பணத்தை எப்படி கேட்பது எனத் தெரியாமல் இருந்த போது கமல் விறுவிறுவென கையில் ஒரு கவரோடு வந்து அதை பாலு மகேந்திராவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது நெகிழ்ந்து போயிருந்த பாலுமகேந்திராவிடம் “இது கடன் இல்லை சார். நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்.” எனக் கூறி சென்றுள்ளார். அப்படி அவர்கள் இணைந்து உருவாக்கிய படம்தான் சதி லீலாவதி.
