மயிலாடுதுறையில் பரபரப்பு: வாலிபரைத் தாக்கி ஆடைகளைக் கிழித்து.. பாலியல் வன்கொடுமை முயற்சி…? போலீஸ் அதிரடி விளக்கம்…!!!

By Swetha on ஆனி 13, 2026

Spread the love

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடந்த மே 18 அன்று, நல்லாடை ஏடிஎம் மையம் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை 8 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டு, ஜாதிப் பெயரைக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளது. அக்கும்பல் கத்தி முனையில் அந்த இளைஞரைச் சரமாரியாகத் தாக்கி, ஆடைகளைக் கிழித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சரண் (26) மற்றும் ஒரு சிறுவன் உட்பட இருவரைக் கைது செய்தனர்; தலைமறைவாக உள்ள மீதி 6 பேரைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

இச்சூழலில், இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கும்பல் தங்கள் மகனை ஜாதி ரீதியாகத் தாக்கியது மட்டுமன்றி, ஆடைகளைக் களைந்து பலவந்தமாக ஓரினச்சேர்க்கை செய்ய முயன்றதாகவும், ஆனால் பெரம்பூர் போலீசார் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு பாலியல் துன்புறுத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் வழக்கை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

   

இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள பெரம்பூர் காவல்துறை உயர் அதிகாரிகள், இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதமே மோதலாக மாறியதாகவும், அவர் தாக்கப்பட்டது உண்மை என்பதால் இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினர். மேலும், இணையத்தில் பரப்பப்படுவது போல அங்கு பாலியல் தொந்தரவோ அல்லது ஓரினச்சேர்க்கை முயற்சியோ எதுவும் நடக்கவில்லை என்றும், அக்குற்றச்சாட்டில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என்றும் காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.