ஓசூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நபரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹார பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ். 32 வயதான இவர் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். முன்விரதம் காரணமாக கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி கொலை செய்யப்பட்டார் .இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
இதனையடுத்து கடந்த 13ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த அனைவரும் ஓசூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்கள். இந்த நிலையில் கொலை வழக்கில் மூன்றாவது நபராக உள்ள மஞ்சுநாத் நடந்த வந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெங்கட்ராஜ் கொலைக்கு பழிக்கு பழியாக அவருடைய ஆதரவாளர்கள் மஞ்சுநாத்தை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
