மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், தன்னை ஒரு மாபெரும் ஆன்மீகவாதி, ஜோதிடர் மற்றும் ஹிப்னாடிஸ்ட் என்று அடையாளப்படுத்திக் கொண்ட அசோக் கராத் என்ற 67 வயது நபர், 58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள கராத், சடங்குகள் செய்வதாகக் கூறி பெண்களுக்கு போதைப்பொருள் கலந்த பானங்களைக் கொடுத்து, அவர்கள் அரை மயக்கத்தில் இருந்தபோது இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் கணவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, அவர்களிடம் பயத்தை விதைத்து, ‘தேவபாணம்’ என்ற பெயரில் போதைப்பொருளைக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரங்களை அசோக் கராத் மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார் என்பது கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது. தனது அலுவலகத்தில் ரகசிய சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பெண்களைச் சீரழித்த காட்சிகளைப் பதிவு செய்துள்ளார். காவல்துறையினர் நடத்திய சோதனையில், சுமார் 58 பெண்களின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் நில வணிகம் மற்றும் மளிகைத் தொழிலில் ஈடுபட்டு நஷ்டமடைந்த இவர், குறுகிய காலத்தில் அதிக பணம் ஈட்டுவதற்காக 2019-ஆம் ஆண்டு முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் என்ற போர்வையில் இந்தத் தொழிலைத் தொடங்கியதாகத் தெரிகிறது.
கராத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரும், ஆரோக்கியமான குழந்தை பிறக்க ஆசி வழங்குவதாகக் கூறி தனது மனைவியிடம் கராத் அத்துமீறியதாகப் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தட்டிக் கேட்டபோது அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டதோடு, கராத்தின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதிகளுடன் இருந்த நெருக்கமான தொடர்புகளால், கராத் இத்தனை காலம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. கராத்தின் பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் உரிமம் இல்லாத கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன, இது அவர் ஒரு கிரிமினல் பின்னணி கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
தற்போது இந்த வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி தேஜஸ்வினி சட்புடே தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) மாநில அரசு அமைத்துள்ளது. டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் அதிகார மையங்கள் வரை இவருக்குத் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆன்மீகம் மற்றும் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தும் இதுபோன்ற போலி சாமியார்களிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதையும், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
