விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியில், நள்ளிரவில் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் உலுக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் கொலை முயற்சி வழக்கில் காரியாபட்டி கல்குறிச்சி மணிநகரைச் சேர்ந்த 60 வயதான முத்து என்பவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளரான சாந்தி (42) மற்றும் அவரது உறவினர் ஸ்ரீதேவி (45) ஆகிய இருவருக்கும் முறையே 70% மற்றும் 40% கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கணவரை இழந்த சாந்தி, கோபாலபுரத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து தனது 17 வயது மகன் மற்றும் 13 வயது மகளை வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று சாந்தியின் வீட்டிற்கு அவரது உறவினரான ஸ்ரீதேவி வந்திருந்த நிலையில், பிள்ளைகள் இருவரும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்க, இரு பெண்களும் வீட்டின் வெளிப்புற திண்ணையில் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அங்கு வந்த முத்து, திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவர் மீதும் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி கொடூரமான முறையில் தீ வைத்துள்ளார். பெண்களின் மரண ஓலத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினரின் அதிரடி விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து, போலீசாரிடம் பல பகீர் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். உயிரிழந்த சாந்தியின் கணவரான பாண்டியராஜின் நண்பர்தான் இந்த முத்து. பாண்டியராஜ் மறைவுக்குப் பிறகு சாந்தியை தன்னுடன் வந்து வாழுமாறு முத்து தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அவரது தவறான கோரிக்கையை சாந்தி முற்றிலும் நிராகரித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த பழிவாங்கும் கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது இந்த வழக்கில் மற்றொரு புதிய திருப்பமும் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அதிகாலை வீடு திறந்து கிடந்ததாகவும், முத்து கதவு பகுதி வழியாக வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும், தீயை பார்த்ததும் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் பத்திரமாக வெளியே ஓடி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த கொடூர சம்பவத்தில் முத்துவுடன் மற்றொரு நபரும் இணைந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அருப்புக்கோட்டை காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
