குஜராத் மாநிலம் சூரத்தின் அம்ரோலி பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான ‘துளசி மாலையை’ (கண்டி மாலை) அகற்றுமாறு அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டார். பாதுகாப்புச் சோதனையின் ஒரு பகுதியாக மாலை அகற்றப்பட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தியதால், அந்த மாணவியின் தந்தை கடும் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மாணவியின் தந்தை “நான் இந்துவின் மகன், நான் சூரத்தில் நிற்கிறேன், பாகிஸ்தானில் அல்ல” என்று ஆவேசமாகக் கத்துவதைக் காண முடிகிறது. ஹிஜாப் போன்ற மற்ற மத அடையாளங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, துளசி மாலைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். அந்த மாணவி தனது தந்தை ஆவேசப்படுவதைக் கண்டு வருத்தமடைந்து, “நேரமாகிறது, பரவாயில்லை” என்று கூறி மாலையை அகற்ற முற்பட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இறுதியில் சில போராட்டங்களுக்குப் பிறகு அந்த மாணவி மாலையுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
View this post on Instagram
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை , மத ரீதியான அடையாளங்களை அகற்றுமாறு கூறுவது தவறு என்றும், இது தங்களது வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் மத அடையாளங்களை அணிய அனுமதி உண்டு என ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தேர்வு மைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று NTA உறுதி அளித்துள்ளது.
