தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர்களில் ஒருவராக தளபதி படத்தின் மூலமாக அறிமுகமானவர் அரவிந்த் சுவாமி. அதன் பின்னர் ரோஜா என்ற திரைப்படம் அவரை இந்தியா முழுவதும் அறிந்த நடிகராக்கியது. அதன் பின்னர் பம்பாய் படம் அவரை சாக்லேட் பாய் கதாநாயகனாக்கியது. கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் அழகிய கதாநாயகனார்.
அதைத் தொடர்ந்து மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சாரக்கனவு, என் சுவாச காற்றே போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற அரவிந்த்சுவாமி 2000 களின் ஆரம்ப கட்டத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த காலத்தில் அவர் தன்னுடைய பிஸ்னஸில் கவனம் செலுத்தி மிகப்பெரிய தொழில்முனைவோராக வளர்ந்தார்.
இதற்கிடையில் அவர் ஒரு விபத்தில் சிக்கி அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு அதன் பக்கவிளைவாக கடுமையாக உடல் எடை அதிகமாகி, முடியெல்லாம் கொட்டி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறினார். எப்படி அவரை சாக்லேட் பாய் என்று கொண்டாடினார்களோ, அவர்களே அவரை பாடி ஷேமிங் செய்ய ஆரம்பித்தார்கள்.
சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட 2012 ஆம் ஆண்டு கடல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். இப்போது தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் அவரின் முதல் படத்திலேயே ரஜினி, மணிரத்னம் மற்றும் இளையராஜா போன்ற லெஜண்ட்கள் இருந்ததை எப்படி எதிர்கொண்டார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் “நான் ரஜினி ஒரு லெஜண்ட், மணிரத்னம் ஒரு லெஜண்ட் என்றெல்லாம் நினைத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் எனக்கு நான் என்னுடைய வசனங்களை சரியாகப் பேசவேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் மேல் நமக்கு மரியாதை இருக்கலாம். ஆனால் பயம் இருக்கக் கூடாது என்பதை சிறு வயதிலேயே என்னுடைய அப்பா சொல்லிக் கொடுத்துள்ளார்” எனப் பேசியுள்ளார்.