நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் சந்தித்த மிகவும் மோசமான மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த காதல் உறவு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த காதல் தனது திரைப்பயணத்தையும், ஆளுமையையும், மனநலத்தையும் கடுமையாகப் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் தனது காதலனிடம் சாதாரணமாகப் பேசுவதற்கு முன்புகூட என்ன விளைவுகள் வருமோ என பயந்து தனக்குள்ளேயே ஒத்திகை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தனது வலியை மறைப்பதற்காக குடும்பத்தினரிடமிருந்தும், நெருங்கிய நண்பர்களிடமிருந்தும் அவர் விலகி இருந்துள்ளார். மேலும், படப்பிடிப்புகளின் நடுவே மன அழுத்தத்தால் கேரவனில் சென்று கதறி அழுதுவிட்டு, மீண்டும் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு வந்து நடித்த வேதனையான நாட்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அந்த உறவில் தான் எதிர்கொண்ட உளவியல் ரீதியான சித்திரவதைகளை ‘அந்நியன்’ பட கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு அனுபமா விளக்கியுள்ளார். அந்த நபர் ஒரு நாள் ‘ரெமோ’ போல அதீத அன்பு காட்டுவாராம், மறுநாள் ‘அந்நியன்’ போல மூர்க்கமாக மாறுவாராம், பின்னர் ‘அம்பி’ போல காலில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்பாராம். அன்பு, வலி, மன்னிப்பு, மீண்டும் அதீத அன்பு என்ற இந்த சுழற்சியில் சிக்கித் தவித்ததால், தனக்குப் பலமுறை ‘பேனிக் அட்டாக்’ வந்ததாக அவர் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் இந்த காதல் உறவு ஒரு அடிமைத்தனமாகவே மாறி தன்னைச் சுற்றியிருந்த அனைவரையும் பாதித்ததாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை கஷ்டங்களையும் கடந்து வந்த அனுபமா, தற்போது இதை வெளிப்படையாகப் பேசுவதற்கான முக்கிய காரணம், தன்னைப் போல பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். தனது இந்த பேட்டிக்குப் பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், இதைப் பார்த்து சிலராவது இதுபோன்று தங்களை அழிக்கும் நச்சு உறவில் இருந்து மீண்டு வருவார்கள் என்ற தைரியத்தில் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். நடிகர் துருவ் விக்ரமும் அனுபமாவும் ‘பைசன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் இருந்ததாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அனுபமாவின் இந்தப் பகிரங்கப் பேட்டி தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
