தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழக அரசின் சமூக நீதி சர்வே குறித்த அறிவிப்பு பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னரே தமிழகத்தில் சமூக நீதி சர்வே நடத்தப்படும் என்ற அரசின் நிலைப்பாட்டை, எதிர்க்கட்சியான திமுகவின் ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாநில அரசே இந்த ஆய்வை நடத்த வேண்டும் என்று வீரவசனம் பேசிய விஜய், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மத்திய அரசின் பின்னால் பதுங்குவதாக அவர்கள் சாடியுள்ளனர்.
திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில், தவெக தலைவர் விஜய்யின் பழைய அறிக்கையை மேற்கோள் காட்டி தற்போதைய அரசின் போக்கை “இரட்டை வேடம்” மற்றும் “பச்சோந்தித்தனம்” என்று விமர்சித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் விஜய் வெளியிட்ட அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக ‘Caste Survey’ என்ற ஆய்வை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா என்றும், அப்போதைய ஆட்சியாளர்கள் இதில் மெத்தனம் காட்டுவதாகவும் கேள்வி எழுப்பியிருந்தார். அன்று மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பேசியவர், இன்று அதே போன்றதொரு நிலையைத் தன் ஆட்சியில் எடுப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19 மற்றும் அடுத்த வார திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த மூன்று நாள் விவாதத்தின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் என்றும், தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான முட்டுக்கட்டைகளையும் கேள்விகளையும் எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
