தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி கட்சிகளும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு கட்சியில் சில முரண்பாடுகள் நீடித்து வருவதாக அவ்வபோது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த விஷயமும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் சமீப காலமாக அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் சில நேரங்களில் தலைவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டி உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். தான் தனது குடும்பத்தின் முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால் தனிக்கட்சி தொடங்குவது என்பது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.
