“அந்த ஒரு தொகுதி கிடைச்சா போதும்..” – டெல்லியை அதிரவைத்த அண்ணாமலையின் கண்டிஷன்… அதிமுக கூட்டணிக்குள் அடுத்த அதிரடி….!

By Nanthini on பங்குனி 24, 2026

Spread the love

சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்த அவர், இது குறித்து தீவிர ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு இம்முறை 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சீனியர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்தமான தொகுதிகளைப் பெற டெல்லி மேலிடத்திடம் காய் நகர்த்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகத் தமிழக பாஜகவின் முக்கிய நிகழ்வுகளில் அண்ணாமலை கலந்துகொள்ளாதது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. பியூஷ் கோயல் சென்னை வந்தபோது அவரை வரவேற்கச் செல்லாத அண்ணாமலை, கோவையில் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவர் கோவையிலேயே போட்டியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததன் விளைவாகவே, தற்போது பியூஷ் கோயலிடம் தொகுதி தொடர்பான கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

   

கடந்த 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அண்ணாமலை, இம்முறை தனது செல்வாக்கு மிகுந்த கொங்கு மண்டலத்திலேயே களம் காண முடிவு செய்துள்ளார். குறிப்பாக, சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகள் பாஜகவுக்குச் சாதகமாக இருக்கும் என அவர் கருதுகிறார். ஒரு மாத கால அவகாசத்தில் வெற்றியை உறுதி செய்ய வேண்டியிருப்பதால், வேட்பாளர் பட்டியலை விரைவாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலிடத்தை வலியுறுத்தியுள்ளார்.

   

இருப்பினும், அதிமுக கூட்டணியில் கோவையில் பாஜகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. பல்லடம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டாலும், அண்ணாமலை கோவை நகர்ப்புறத் தொகுதிகளையே குறிவைத்து வருகிறார். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் போது, அண்ணாமலை விரும்பிய தொகுதி அவருக்குக் கிடைக்குமா அல்லது கூட்டணி கணக்குகளுக்காக அவர் சமரசம் செய்து கொள்வாரா என்பது தெரியவரும்.