தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையிலும், பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் பார்க்கப்பட்டவருமான அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடாததோடு, தற்போது பாஜகவிலிருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். 2020-ல் கட்சியில் இணைந்து, குறுகிய காலத்திலேயே மாநிலத் தலைவராக உயர்ந்தவர், தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். விரைவில் அவர் புதிய கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பான்-இந்தியா அரசியல்வாதியாக வலம் வந்த அண்ணாமலையின் இந்த திடீர் வெளியேற்றம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை தலைவராகப் பொறுப்பேற்றபோது ‘சிங்கம்’, ‘தீரன்’ என்று தொண்டர்களால் கொண்டாடப்பட்டார். பாஜாகவை சொந்தக் காலில் நிறுத்த வேண்டும் என்ற அவரது எண்ணம் சரியாக இருந்தாலும், அதற்கான அஸ்திவாரத்தை அவர் சரியாக அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. எல்.முருகன் தலைவராக இருந்தபோது இருந்த அடிமட்டக் கட்டமைப்பு, அண்ணாமலையின் காலத்தில் சிதைந்ததாக நிர்வாகிகள் கருதுகின்றனர். சக சீனியர்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் போக்கு, ஹனி டிராப் விவகாரம் போன்ற சர்ச்சைகள் கட்சியின் நற்பெயரைக் குலைத்தன. மேலும், தன்னை புகழ்பவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்கினார் என்ற அதிருப்தியும் அவர் மீது வலுவாக இருந்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தயவால் 4 இடங்களில் வென்ற பாஜக, அண்ணாமலையின் கடுமையான விமர்சனங்களால் அந்த கூட்டணியை இழந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. “அதிமுகவுடன் கூட்டணி இருந்திருந்தால் 5 முதல் 10 தொகுதிகளிலாவது வென்றிருக்கலாம், அண்ணாமலையை நம்பி மோசம் போய்விட்டோம்” என்று பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அவர் மீது கடும் கோபமடைந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ரஃபேல் வாட்ச் விவகாரம், அவரது திடீர் பொருளாதார வளர்ச்சி மற்றும் திமுகவுடன் ‘அண்டர் டீலிங்’ வைத்திருப்பதாக எழுந்த புகார்களும், அதற்குப் பதிலடியாக அவர் எடுத்த விசித்திரமான அரசியல் முடிவுகளும் சமூக ஊடகங்களில் மீம்ஸ் மெட்டீரியலாக மாறிப் போனது.
இனியும் அண்ணாமலையை நம்பிப் பயனில்லை என்று முடிவு செய்த டெல்லி தலைமை, அவரை ஓரங்கட்டிவிட்டு நயினார் நாகேந்திரனை முன்னிறுத்தி அதிமுகவுடன் கரம் கோர்த்தது. அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது தனிமனித துதிபாடல் அரசியலை மோடியும் அமித்ஷாவும் எப்போதோ நிராகரிக்கத் தொடங்கிவிட்டனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு அண்ணாமலைக்கு மோடி, அமித்ஷாவைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கூட கிடைக்கவில்லை. “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது” என்று சவால் விட்ட அண்ணாமலை, தற்போது தனக்கான அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்தே, பாஜக தன்னை புறக்கணிப்பதற்கு முன்பாக, தான் பாஜகவை புறக்கணிப்பது போல் காட்டிவிட்டு வெளியேறியுள்ளார் என்று தமிழக பாஜக நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
