விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்திக்கவுள்ளார். ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியரின் 61-வது திருமண நாளை முன்னிட்டு, அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. பாமகவை வழிநடத்துவது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக தந்தை மற்றும் மகன் இடையே கடந்த சில காலமாகவே பல்வேறு கருத்து வேறுபாடுகளும், உட்கட்சி மோதல்களும் நீடித்து வருகின்றன.
கட்சிக்குள் நிலவும் இந்தத் தொடர் சலசலப்புகளுக்கு மத்தியில், குடும்ப நிகழ்வை முன்னிட்டு நடைபெறும் இவர்களின் இன்றைய சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தனிப்பட்ட சந்திப்பின் மூலம் தந்தை, மகன் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்து கட்சிக்குள் சுமுகமான சூழல் திரும்புமா என்ற பெரிய எதிர்பார்ப்பு தற்போது பாமக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
