போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு மோசடி வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011-15 காலப்பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பணியாற்றிய போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளை வழங்குவதாகக் கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வேலைவாய்ப்பு மோசடி மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு 410 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டப்படி வழக்குத் தொடர அரசின் அனுமதி கட்டாயம் தேவை என்ற சூழலில், கடந்த ஆண்டு மே மாதம் ஆளுநரிடம் அமலாக்கத்துறை கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அரசிடம் தான் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அமலாக்கத்துறை உரிய ஆதாரங்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது. இந்த அனுமதிக் கடிதத்திற்கு தமிழக அரசு சாதகமான முடிவை வழங்கினால் மட்டுமே முடங்கிக் கிடக்கும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி பணம் வாங்கியதை செந்தில் பாலாஜியே ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்ட பலருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதை அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், லஞ்சத்திற்கு எதிராக ‘ஜீரோ சகிப்புத்தன்மை’யுடன் செயல்படுவோம் என தற்போதைய தமிழக அரசின் தேர்தல் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளதால், அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிற்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
