தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் புதிய வழிகாட்டுதல்களை வழங்கி மாநிலம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, பேருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக எடுப்பதற்கு முன்னதாக, அதன் பிரேக் சிஸ்டம், டயர்களின் தேய்மானம் மற்றும் காற்று அழுத்தம் ஆகியவற்றை ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2026 புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக் காலப் பயணங்கள் அதிகரிக்கவுள்ள நிலையில், விபத்துகளைத் தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து என்ஜினின் செயல்பாடு மற்றும் இதர தொழில்நுட்பக் கோளாறுகளைத் தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனப் பராமரிப்புப் பணிகளில் ஏதேனும் சுணக்கம் அல்லது அலட்சியம் காட்டப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.
