விஜய் மட்டும் அந்த உண்மையை சொன்னால்… உடனே பதவி விலகத் தயார்… அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் அதிரடி சவால்..!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போலி கடித விவகாரம் குறித்து மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் அதிரடியான சவால் ஒன்றை விடுத்துள்ளார். சென்னையில் இன்று (மே 9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுகுறித்து ஊடகங்களுக்கு நேரடியாகப் பேட்டி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். விஜய் இந்த விவகாரத்தில் உண்மையைச் சொல்லிவிட்டால், தாம் தனது பதவியை உடனே ராஜினாமா செய்யத் தயார் என்று அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தான் கையெழுத்திடுவது போன்று சமூக வலைதளங்களில் உலவும் வீடியோ குறித்து விளக்கம் அளித்த காமராஜ், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்று குற்றம் சாட்டியுள்ளார். அசல் ஆதரவுக் கடிதம் தன்னிடம் இல்லை என்றும், விஜய் தான் அந்த ஒரிஜினல் லெட்டரை பொதுவெளியில் காட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், போலி ஆவணங்களைத் தயாரித்து அதன் மூலம் விஜய் முதலமைச்சர் பதவியை அடைய முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார்.

   

இந்த விவகாரம் தொடர்பாகத் டி.டி.வி தினகரனும் விஜய்யிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வீடியோவை எடுத்தது விஜய்யா அல்லது அவரது ஆதரவாளர்களா என்பதைத் தமிழக வெற்றிக் கழகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அமமுக தரப்பு, விஜய் இது தொடர்பாக மௌனம் கலைத்து ஊடகங்களைச் சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.