தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல அந்தந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் வருகின்ற தேர்தலில் போட்டியிட எம்எல்ஏ சீட் வாங்குவதற்கும் காய்களை நகர்த்தி வருகின்றன. அதன்படி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தலைவர்களும் எம்எல்ஏ சீட் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பாஜகவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களை நேரடியாக அமித்ஷா தேர்ந்தெடுப்பார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவிற்கு 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது. பிறகு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இரண்டாக உடைந்தது. அதிமுக மற்றும் தேமுதிக இணைந்து தேர்தலை சந்தித்தது. பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தது.
இந்த தேர்தலில் பாஜக தனித்து நான்கு தொகுதிகளும் கூட்டணியாக எட்டு தொகுதிகளும் வரை வெற்றி பெறும் என பாஜகவின் டெல்லி தலைமை கணக்கு போட்டு இருந்தது. ஆனால் பாஜக கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இந்த முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை நினைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போதே டெல்லி தலைமையிடம் சீட் பெறுவதற்காக பல மூத்த தலைவர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.
இந்த முறை வேட்பாளர்கள் தேர்வில் டெல்லி தலைமையின் நேரடி பார்வை இருக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளாராம். வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெற்று அதன் மூலம் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் குறித்து தகவல் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது. வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க அமித்ஷா முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியை தொடர்பு மூலம் எம்எல்ஏ சீட்டு கிடைத்துவிடும் என எதிர்பார்த்து இருந்தவர்கள் சற்று கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
