விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு முன்பாகவே இணையத்தில் கசிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், இந்த கசிவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டமிட்ட சதி என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தயாரிப்பாளரிடமும் சென்சார் போர்டிடமும் மட்டுமே இருக்க வேண்டிய படம் வெளியே கசிந்திருப்பதற்கு சென்சார் போர்டைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய அரசே காரணம் என்று அவர் சாடியுள்ளார்.
இந்திய திரைத்துறையை மிரட்டுவதற்காகவும், பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராக எந்தவொரு நடிகரோ அல்லது தயாரிப்பாளரோ செயல்படக் கூடாது என்பதற்காகவும் அமித் ஷா நேரடியாக இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற செயல்கள் மூலம் திரைத்துறையினரை அச்சுறுத்த மத்திய அரசு முயல்வதாகவும், இதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அதிகாரம் இல்லை என்றும், அமித் ஷாவின் நேரடித் திட்டத்தின் கீழ்தான் இது நடந்துள்ளது என்றும் மாணிக்கம் தாகூர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
