நேற்று கேரள மாநிலம் குன்னம் குளம் அருகே உள்ள பகுதியில் ஒரு காரும் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி கண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் இருந்த நோயாளியை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு கண்ணூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகளில் கார் ஒன்று ஆட்டோ ரிக்ஷாவை முந்திக்கொண்டு ஆம்புலன்ஸ் மீது மோதியது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த நிலையில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் குன்னம் குளத்தை சேர்ந்த புஷ்பா மற்றும் கண்ணுரை சேர்ந்த குஞ்சிராமன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புஷ்பாவின் கணவர் ஆண்டோ வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பலரையும் பதற வைத்துள்ளது.
