தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தக் காங்கிரஸ் காத்திருக்கும் நிலையில், திமுக தரப்பிலிருந்து முறையான பதில் எதுவும் வராதது அக்கட்சியினரிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இது குறித்துத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். “நாங்கள் இரண்டு மாதங்களாகத் திமுகவின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். தேர்தல் வர இன்னும் சில காலமே உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை” என அவர் விரக்தியுடன் தெரிவித்துள்ளார். இந்தத் தாமதம் காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.
தொகுதிகளின் எண்ணிக்கையிலும் இரு கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை எனத் தெரிகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் இடங்களைக் காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகச் சொல்லப்பட்டாலும், திமுக தரப்போ கடந்த முறையைப் போலவே 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் கறாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தற்போது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ள சூழலில், கூட்டணியை உறுதி செய்வதில் ஏற்படும் இத்தகைய தாமதம் களப்பணிகளைப் பாதிக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகளும் ஒருபுறம் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான இந்த மோதல் போக்கு வரும் நாட்களில் எந்த மாதிரியான திருப்பங்களை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
