பிரிட்டனின் வடமேற்கு பகுதியிலுள்ள கும்பிரியா செயின்ட் பீஸ் மற்றும் வேல்ஸ் கடற்கரைகளில், ‘வெலெல்லா வெலெல்லா’ எனப்படும் “கடல் பட்டம்” வகை விசித்திர உயிரினங்கள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு ஏலியன் வடிவில், அடர் நீல நிறத்தில் இருக்கும் இந்த உயிரினங்கள் வழக்கமாக இந்தியா போன்ற வெப்பமண்டல கடல் பகுதிகளிலேயே அதிகம் காணப்படும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக பிரிட்டனில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததே இவை இவ்வளவு அதிக அளவில் கரை ஒதுங்குவதற்குக் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தோற்றத்தில் ஜெல்லி மீன்களைப் போலக் காட்சி அளித்தாலும், இவை உண்மையான ஜெல்லி மீன்கள் அல்ல; ‘மேன் ஓ வார்’ என்ற ஆபத்தான கடல் உயிரினத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை சிறிய உயிரினமாகும். சுயமாய் நீந்தும் திறன் அற்ற இந்த உயிரினங்கள், கடல் அலைகள் மற்றும் காற்றின் போக்கிலேயே அடித்துச் செல்லப்படுகின்றன. தற்போது இவற்றின் இனப்பெருக்கம் பெருமளவில் அதிகரித்திருப்பதால் கரை ஒதுங்கியுள்ளன. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவற்றைத் தொட்டால் கடுமையான வலியும் தோல் எரிச்சலும் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாகக் குளிர்ந்த காலநிலையைக் கொண்ட பிரிட்டன் கடற்பகுதியில், வெப்பமண்டல உயிரினங்கள் கரை ஒதுங்குவது என்பது புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் சூழலியலில் ஏற்படும் ஆபத்தான மாற்றங்களின் வெளிப்பாடே என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும், உள்ளூர் மக்களோ இத்தகைய அபூர்வ நிகழ்வை இதுவரை கண்டதில்லை என்றும், இது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஏதோவொரு பெரிய இயற்கை பேரழிவுக்கான எச்சரிக்கை மணி என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
