தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இருப்பினும், எதற்கும் பதிலளிக்காமல் அவர் மௌனமாகவே கடந்து சென்றார். இந்தச் சூழலில், “ஆட்சி மாற்றம் வேண்டுமா?” என்ற கேள்விக்கு அஜித் ‘No Need’ (தேவையில்லை) என்று பதிலளித்ததாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உடனடியாக இதற்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமளித்துள்ளார். “நடிகர் அஜித் குமார் எவ்விதமான அரசியல் கருத்தையும் கூறவில்லை, அவர் மௌனமாகவே சென்றார்; பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அஜித்தின் பெயரில் உலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
