தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர். அவர் இயக்கிய சென்னை 28, சரோஜா, மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்குனர் ஆவதற்கு முன்னர் அவர் ஏப்ரல் மாதத்தில் மற்றும் சிவகாசி ஆகிய படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். பின்னர் உன்னை சரணடைந்தேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் சென்னை 28 படத்தை இயக்கினார்.
மங்காத்தா வெற்றிக்குப் பிறகு அவரை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அதில் ஒன்றில் கார்த்தியும் மற்றொன்றில் சூர்யாவும் நடித்தனர். சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

அதன் பின்னர் அவர் ‘மாநாடு’ படம் மூலம் கம்பேக் கொடுத்து சமீபத்தில் விஜய்யை வைத்து ‘GOAT’ படத்தை இயக்கினார். மங்காத்தா படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபு பல படங்களை இயக்கினாலும், இன்றளவும் அவர் பெயர் சொல்லும் படமாக மங்காத்தாதான் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அஜித் போன்ற ஒரு மாஸ் கதாநாயகனை முழுக்க முழுக்க வில்லனாகக் காட்டி ஒரு படத்தை எடுப்பது என்பது நம்ப முடியாத ஒன்றாகதான் இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனரும் பாடல் ஆசிரியருமான கங்கை அமரன் “மங்காத்தா படத்தின் கதை என்னுடையதுதான். நான்தான் அந்தகதையை வெங்கட் பிரபுவிடம் கூறி உன் பெயர் போட்டு எடுத்துக்கோ என்றேன். அப்போது அந்த கதையில் அஜித் நடிப்பதாக இல்லை. அதன் பிறகு இந்த கதையைக் கேட்டுதான் அஜித் நான் நடிக்கிறேன் என உள்ளே வந்தார்” எனக் கூறியுள்ளார்.
