தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தனித்துவமான பண்பை கொண்டவர். சினிமாவில் நடிப்பதோடு தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடியவர் தான் அஜித். கடந்த சில வருடங்களாகவே எந்த வித டிவி சேனல்களிலும் அல்லது தனிப்பட்ட முறையிலும் youtube சேனல்களுக்கு கூட இவர் பேட்டியளிப்பதை தவிர்த்து வருகின்றார். அதனைப் போலவே பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட அஜித் பங்கேற்பது கிடையாது. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டக் கூடியவர். கார் பந்தயங்கள் மூலம் அவரது கனவை நிறைவேற்றும் வேளையில் முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கின்றார். அதில் தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறார்.

சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கக்கூடிய அஜித்குமாரின் செயலை பாராட்டும் விதமாக நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கிய கௌரவித்தார். அப்போது அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவருடைய மகன், மகள் அனைவரும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி இருந்தது. மேலும் பத்மபூஷன் விருதுடன் நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் அன்பை பகிர்ந்து கொண்ட காட்சிகளும் வெளியானது. விருது பெற்றதைத் தொடர்ந்து அஜித் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்கு நேர்காணலில் பேட்டி அளித்த போது பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், இன்னும் மனதளவில் மிடில் கிளாஸ் ஆகத்தான் நான் உணர்கிறேன். பத்மபூஷன் என்று சொன்னால் என்னால் நம்ப முடியவில்லை.

இதை வாங்கியதை நினைத்து பெருமையாக கருதுகின்றேன். கொஞ்சம் உணர்ச்சியாகவும் உள்ளது. இதுபோன்ற விருதுகளை வாங்கும் போது தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரிகின்றது. நான் சரியான பாதையில் இருப்பதைப் போல உணர்கிறேன். எனக்கு மிகப்பெரிய பலம் என்னுடைய குடும்பம் தான். என்னுடைய பெற்றோர், சகோதரர்கள், மனைவி ஷாலினி மற்றும் எனது குழந்தைகளுக்கும் நன்றி. என்னுடைய வெற்றி தோல்வி என அனைத்திலும் உறுதுணையாக இருப்பது அவர்கள் தான். என் மனைவி ஷாலினி எனது வெற்றிக்கு தூணாக உள்ளார்.

இந்த நேரத்தில் அவரைப் பற்றி பேசுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நான் ஷாலினியை திருமணம் செய்த போது பிரபல நடிகையாக இருந்தார். எனக்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். எனக்காக அவர் பல தியாகங்களையும் செய்துள்ளார். நான் எடுத்த எல்லா முடிவுகளிலும் பக்க பலமாக இருந்துள்ளார். எனக்கு கிடைக்கும் எந்த அங்கீகாரமும் எனது மனைவிக்கு சேரும். சூப்பர் ஸ்டார் மற்றும் தல பட்டங்கள் என இந்த பட்டங்களில் எல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது.
சினிமாவில் நடிப்பதற்காக நல்ல சம்பளம் வாங்குகின்றேன். இந்தப் பட்டங்கள் எனக்கு எப்போதும் தேவையில்லை. சினிமாவை தாண்டி எனக்கு வேறு வேலைகள் பல கனவுகள் உள்ளது. இதனால் அஜித் குமார் AK, அஜித் என்று என் பெயரை சொல்லி கூப்பிட்டாலே எனக்கு போதும். இதைத் தாண்டி நான் எனக்குப் பிடித்த வேலைகளை விரும்பி செய்கின்றேன். என்னை எவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்ள முடியுமோ அதே அளவு சாதாரணமாக இருக்கின்றேன். நான் எந்த துறையில் வெற்றி பெற்றாலும் அன்பு மாதரமும் அள்ளித்தரும் மக்களுக்கு நன்றி கடன் பட்டிருப்பதாகவே உணர்கிறேன் என அஜித் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
