தாய்லாந்தின் புகெட்டில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, எதிர்பாராத விதமாகக் கடுமையான காற்றில் சிக்கியது. இதன் காரணமாக விமானம் திடீரென சுமார் 300 அடி தூரம் கீழே சரிந்ததால், நிலைதடுமாறி உள்ளிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பலர் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். இதில் பத்து பயணிகள் உட்பட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது விமானத்தின் உள்கூரை சேதமடைந்ததுடன், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் குலுங்கல் சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்து பயணிகளைப் பீதியில் ஆழ்த்தியது.
https://www.instagram.com/reel/Dbnk0k-TLjb/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
இந்நிலையில், இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டாம் என்றும், அது ஏர் இந்தியா நிறுவனத்தின் புகழைக் கெடுத்துவிடும் என்றும் விமான ஊழியர்கள் தங்களைக் கேட்டுக்கொண்டதாகப் பயணி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக லக்னோவில் அவசரத் தரையிறக்கம் செய்யாமல் டெல்லிக்குக் கொண்டு சென்றதாகவும், அங்குத் தரையிறங்கிய பிறகும் போதிய மருத்துவ உதவியோ அல்லது சக்கர நாற்காலிகளோ உடனடியாக வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாகப் விமானப் போக்குவரத்துச் தலைமை இயக்குநரகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
