திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று ‘க்ளாட்’ ஏஐ-ன் தாய் நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ எச்சரித்துள்ளது. ‘ரிகர்சிவ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட்’ எனப்படும் நிலையை எட்டும்போது, ஏஐ சிஸ்டம்கள் மனிதர்களின் உதவியின்றித் தங்களைத் தாங்களே அப்டேட் செய்துகொண்டு, தங்களை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்த அடுத்த தலைமுறை ஏஐ-களை உருவாக்கும் திறனைப் பெற்றுவிடும். இது ஏதோ எதிர்காலக் கற்பனை அல்ல; தற்போதைய 2026 மே மாத நிலவரப்படி, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் கோட்பேஸில் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான கோடிங் வரிகளை ‘க்ளாட்’ ஏஐ-தான் எழுதுகிறது என்பதே இதற்கு சான்றாகும்.
ஏஐ தன்னைத்தானே உருவாக்குவது என்பது அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் மிகப்பெரிய நன்மைகளைத் தந்தாலும், அவற்றைக் கண்காணிப்பதும் பாதுகாப்பதும் மனிதகுலத்தின் முன்னால் உள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். ஏஐ-கள் தங்களின் அடுத்த வெர்ஷன்களை உருவாக்கத் தொடங்கும்போது, சவால் என்பது அதன் திறனை வளர்ப்பதில் இல்லை, மாறாக அதை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது என்று ஃபியூச்சர் ஷிப்ட் லேப்ஸ் இணை நிறுவனர் சாகர் விஷ்னோய் தெரிவித்துள்ளார். ஏஐ எப்போதுமே மனிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்வதே நமக்கு இருக்கும் உண்மையான சோதனை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆபத்தைத் தவிர்க்க, உலகிலுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் அதிநவீன ஏஐ மேம்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் கோருகிறது. ஆனால், சந்தைப் போட்டி மற்றும் பின் தங்கிவிடுவோம் என்ற பயம் காரணமாக நிறுவனங்கள் ஏஐ வளர்ச்சியை நிறுத்த மாட்டார்கள் என்பதால் இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், 1970களில் டிஎன்ஏ தொழில்நுட்பம் வந்தபோது விஞ்ஞானிகள் முதலில் அதன் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி விவாதித்ததைப்போல, இப்போதும் அடுத்த 6 மாதங்களுக்கு அமைதியாகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தி கட்டிங் எட்ஜ் குரூப் நிறுவனர் அன்ஷ் மெஹ்ரா வலியுறுத்தியுள்ளார்.
