தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள், குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் தவெக அரசுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு ஆகியவை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் நுணுக்கங்களை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் கொறடா உத்தரவை மீறி, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது, அவர்களின் பதவிக்கு சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 10-வது அட்டவணைப்படி, கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்படுவது தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால், கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது.
பொதுவாக, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் பிரிந்து சென்றால் தகுதி நீக்கத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், சட்டம் கூறுவது வேறாக இருக்கிறது. வெறும் எம்.எல்.ஏ-க்கள் மட்டும் பிரிந்து சென்றால் போதாது; 10-வது அட்டவணையின் 4-வது பிரிவின்படி, அதிமுக என்ற அரசியல் கட்சி அதிகாரப்பூர்வமாக மற்றொரு கட்சியுடன் (இங்கு தவெக) இணைய வேண்டும். அவ்வாறு இணையும் பட்சத்தில், அந்த முடிவை 2/3 பங்கு எம்.எல்.ஏ-க்கள் ஆதரித்தால் மட்டுமே அவர்கள் தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்ப முடியும். தற்போதைய சூழலில் வெறும் ஆதரவு மட்டுமே அளிக்கப்பட்டிருப்பதால், இது கட்சித் தாவலாகவே கருதப்பட வாய்ப்புள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள், குறிப்பாக ‘சுபாஷ் தேசாய் vs மகாராஷ்டிர ஆளுநர்’ வழக்கின்படி, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட கட்சித் தலைமையின் முடிவிற்கே சபாநாயகர் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதிமுகவின் சட்டவிதிப்படி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமிக்கும் கொறடாவின் உத்தரவே செல்லுபடியாகும். மேலும், ‘ரவி எஸ் நாயக்’ வழக்கின் தீர்ப்புப்படி, ஒரு உறுப்பினர் கட்சியின் முடிவிற்கு எதிராகப் பகிரங்கமாகச் செயல்படுவது, அவர் தன்னிச்சையாகத் தனது உறுப்பினர் தகுதியைத் துறந்ததாகவே (Voluntarily giving up membership) கருதப்படும். இதற்கு முறையான ராஜினாமா கடிதம் அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா என்பது சபாநாயகரின் கைகளிலும், அதிமுக தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கையிலுமே உள்ளது. ஒருபுறம் சட்ட விதிகள் கடுமையாக இருந்தாலும், மறுபுறம் அரசியல் கணக்குகள் வேறுவிதமாக உள்ளன. ஏற்கனவே பலவீனமடைந்துள்ள கட்சிச் சூழலில், 25 எம்.எல்.ஏ-க்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தால் அது கட்சியை மேலும் சிதைக்குமா அல்லது ஒழுங்கு நடவடிக்கையாக அமையுமா என்ற தயக்கம் எடப்பாடி தரப்புக்கு இருக்கலாம். எது எப்படியோ, தமிழக அரசியலில் “ஆயா ராம், கயா ராம்” கலாச்சாரம் மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது மட்டும் உறுதி.
