தமிழக அரசியலில் பரபரப்பான சூழலுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி “அதிமுகதான் எங்களின் உயிர் மூச்சு, அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச் செயலாளர்” எனத் தெரிவித்து அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சூழலில், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதையும் மீறி, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்த ஆதரவின் காரணமாக, தவெக அமைச்சரவையில் அதிமுகவின் இந்தத் தனி அணிக்கு ஐந்து இடங்கள் வரை கிடைக்கலாம் என்று பலத்த வதந்திகள் பரவின. அதே நேரத்தில், அதிமுக அமைச்சரவைக்குள் நுழைந்தால் தவெக-வுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு கொடுத்து வந்த விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பும், விவாதங்களும் எழுந்தன. ஆனால், நேற்று மற்றும் இன்று நடந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை விரிவாக்க விழாக்களில் காங்கிரஸ் மற்றும் தவெக எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே பொறுப்பேற்றுக் கொண்டனர்; அதிமுகவினருக்குப் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
அமைச்சரவையில் இடம் கிடைக்காதது மற்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு எதுவும் அனுப்பப்படாதது, வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, தங்களது அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோனை நடத்திய வேலுமணி தரப்பினர், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தங்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “நாங்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கப் போவதாகவும், தற்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை; நானும் சி.வி.சண்முகமும் அமைச்சரவையில் சேரப் போவதாக எங்கும் கூறவில்லை” எனத் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், “திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் தான் மக்கள் தவெக-வுக்கு ஆதரவு தந்துள்ளனர், நாங்களும் அதே திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்; அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை, அது வெறும் கருத்து வேறுபாடுதான். இப்போதும் சொல்கிறேன், அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச் செயலாளர், அவரிடம்தான் தோல்வி குறித்த ஆய்வறிக்கையை வழங்குவோம், அதிமுகதான் எங்களின் உயிர் மூச்சு” என்று கூறித் தனது அரசியல் அந்தரங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
