அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. இபிஎஸ்-ஐ கழற்றிவிட துணியும் இரு தூண்கள்… தவெக-வில் இணையும் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்?… பரபரப்பு தகவல்…!

By Nanthini on வைகாசி 28, 2026

Spread the love

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் மீண்டும் இணைந்துவிட்டதாக அறிவித்த போதிலும், கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் பரபரப்பும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த இணைப்பு நிகழ்வை முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ஜயபாஸ்கர் ஆகியோர் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் மண்டியிட விரும்பாத சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவரைச் சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், விராலிமலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சி.வி.ஜயபாஸ்கர், அதிமுகவில் தொடரலாமா அல்லது புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளார்.

கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் ஒரே தரப்பிடம் குவிந்து கிடப்பதும், இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதும் பல சீனியர் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், “இனி அதிமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா?” என்ற சந்தேகம் கட்சிக்குள்ளேயே வலுவாக எழுந்துள்ளது. எதிர்கால வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருவதாகக் கருதும் சில முக்கிய முகங்கள், தங்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

   

இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) நோக்கி அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலர் நகரத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன் போன்ற மூத்த நிர்வாகிகளும், 4 அதிமுக எம்எல்ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தவெகவை “புதிய அதிமுக” என்று வர்ணித்துள்ள நிலையில், தவெகவின் வளர்ச்சிக்கு பழைய அதிமுகவினரின் பங்களிப்பு இன்றியமையாததாக மாறி வருகிறது.

   

தற்போது சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இதுகுறித்து அவர்கள் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவது இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. ஒருவேளை, வடக்கு மற்றும் மத்திய தமிழகத்தில் பலத்த செல்வாக்குக் கொண்ட இந்த இரு முக்கிய முகங்களும் கட்சியை விட்டு விலகினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு மீள முடியாத ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.