வேறு குற்றச்சாட்டு எதுவும் இல்லாததால் அதிமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் கூறுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, SIR வந்துவிட்டால் தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் SIR வந்தால் மக்களுக்கு வாக்களிக்கக்கூடிய உரிமையே போய்விடும் என்ற அவதூறு செய்தியை திமுக பரப்புகிறது. SIR என்று சொன்னாலே திமுக அலறுகிறது, பதறுகிறது. முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவித்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என SIR வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியை திமுகவால் குறை சொல்ல முடியாததால் பாஜக உடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர். வேறு குற்றச்சாட்டு இல்லாததால் அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறது என்று செங்கோட்டையன் கூறுகின்றார். எனது மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்து உள்ளீர்களா? திமுக ஆட்சியில் 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக திமுக அமைச்சரே தெரிவித்திருக்கிறார். திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே மட்டும்தான் போட்டி என விஜய் கூறியது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த மட்டுமே, எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என உள்துறை அமைச்சர் அமித்சாவை அறிவித்துவிட்டார். முதல்வர் வேட்பாளரும் அதிமுகவை சேர்ந்தவர் தான் என்பதை அமித்ஷா உறுதி செய்துவிட்டார் என்று இபிஎஸ் கூறியுள்ளார்.
