சசிகலா – ராமதாஸ் கூட்டணியில் அதிரடிப் பிளவு..! இரவோடு இரவாக அன்புமணி பக்கம் தாவிய முக்கிய புள்ளி… அதிரும் அரசியல் வட்டாரம்..!!

By Soundarya on சித்திரை 2, 2026

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலா இடையிலான அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், அக்கூட்டணியிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் மீண்டும் பாமகவில் இணைந்து வருகின்றனர். புதுச்சேரி மாநில பாமக பொருளாளர் கணபதி, சோளிங்கர் அ.மா.கிருஷ்ணன் மற்றும் உளுந்தூர்பேட்டை ஜெகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அன்புமணி ராமதாஸின் தலைமையேற்று தாய் கழகத்திற்கே திரும்பியுள்ளனர். இந்த திடீர் வரவு பாமகவின் அடிமட்ட தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சியின் உட்கட்சி பலத்தை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது.

மற்றொரு முக்கிய திருப்பமாக, கடந்த காலங்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டு பேசிய மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் மகன் கனலரசன், தற்போது ஜெயங்கொண்டம் பகுதியில் பாமகவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு குருவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீண்டும் பாமகவுடன் இணக்கமான சூழலை வெளிப்படுத்துவது, வட மாவட்டங்களில் அக்கட்சியின் வாக்கு வங்கியை மேலும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் வருகை, வரவிருக்கும் தேர்தல் களத்தில் பாமகவின் கரத்தை வலுப்படுத்தும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.