தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் பலருக்கும் பரிச்சயமானவர்தான் டி கே கலா. கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக இவர் நடித்திருப்பார். அவரைப் பார்த்ததும் அம்மாடி இப்படி ஒரு அம்மாவா? இதுபோல யாருக்கும் ஒரு மாமியார் கிடைக்கவே கூடாது என்று பல பெண்கள் பயந்து போகும் அளவில் தான் அவருடைய கேரக்டர் இருந்தது. ஆனால் அவர் ஒரு பிரபலமான பாடகி என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். பல வருடங்களுக்கு முன்பு வெளியான அகத்தியர் திரைப்படத்தில் இடம் பெற்ற தாயின் சிறந்த கோவிலும் இல்லை என்ற பாடலை பாடியது இவர்தான். அதுபோல முன்னணியை பாடகர்கள் பலரின் பாடல்களில் இவர் பல பாடல்களை பாடி உள்ளார்.

அதுபோல ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தில் இடம் பெற்ற வந்தனம் வந்தனம் பாடல், பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம் பெற்ற போய் வா நதியலையே என்ற பாடலையும் இவர் தான் பாடியுள்ளார். அதனைப் போல ஏ ஆர் ரகுமான் இசையில் டூயட் திரைப்படத்தில் இடம் பெற்ற குளிச்சா குற்றாலம் பாடல், கருத்தம்மா படத்தில் இடம் பெற்ற ஆராரோ ஆரிராரோ, மறுமலர்ச்சி, தாஜ்மஹால் மற்றும் சிவப்பதிகாரம் போன்ற பல படங்களில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நடிகையாகவும் கில்லி படத்தில் மட்டுமல்லாமல் கஸ்தூரிமான், வெயில், குருவி, பிரிவோம் சந்திப்போம், ஐ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தபோது பேசினார். அப்போது, நான் முதலில் பாடகியாக தான் அறிமுகமானேன். அதன் பிறகு தான் நடிக்க ஆரம்பித்தேன். சமீபகாலமாகத்தான் நடித்துக் கொண்டிருக்கின்றேன். முதலில் நான் பாடகி தான். என்னுடைய அம்மா மிகப்பெரிய நடிகை.

“காலையில தானடா மகாலட்சுமி சொல்லிட்டு போன, அது வேற வாய் இது நாற வாய்” என்ற வடிவேலு காமெடிகள் அவருக்கு தாயாக வருபவர் தான் என்னுடைய அம்மா. நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். என் அம்மாவின் மறைவுக்குப் பிறகு என்ன நடிக்க கூப்பிட்டாங்க. புகழ்பெற்ற இயக்குனர் தரணி தான் என்னை முதன் முதலில் நடிக்க அழைத்தார். அப்போதான் கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் அம்மாவாக நடித்திருந்தேன். அடுத்ததாக தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தேன். ஆகவே அந்தப் படங்களுக்கு பிறகு தான் நான் நடிகையானே தவிர அதற்கு முன்பு பாடகியாக தான் இருந்தேன் என கலா பேசியுள்ளார்.
