தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தவர் சோனியா அகர்வால். இவர் செவன் ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, கோவில், புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இயக்குனர் செல்வராகவனை சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
சில வருடங்களிலேயே கணவரை பிரிந்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தது போல அவரால் மீண்டும் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. சிறிய சிறிய கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தார். சோனியா அகர்வால் ஒரு பேட்டியில் கூறும்போது, நான் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது திருமணம் செய்து கொண்டதால் ஒரு பிரேக் எடுத்தேன்.
அதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று இப்போது நினைக்கிறேன். ஏனெனில் புதுப்பேட்டை நடித்து முடித்த நேரத்தில் தெலுங்கில் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால் நான் அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
அந்த இரண்டு படங்களுமே வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த படங்களில் நான் நடித்திருந்தால் இப்போது என் வாழ்க்கையை வேறு விதமாக இருக்கும். திருமணத்தால் என் வாழ்க்கையே நிலை தடுமாறி விட்டது என சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
