தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, இன்றும் பெயர் சொன்னவுடன் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக, அந்த காலத்தில் புகழுடன் வாழ்ந்திருக்கிறார். படத்தில், சில்க் ஸ்மிதாவின் ஒரு நடன பாட்டு இருந்தால் போதும், வசூலை அள்ளி விடலாம் என்பதே தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது. அது மிகப்பெரிய உண்மையாகவும் இருந்தது. ஆனால், அப்படி செல்வாக்குடன் வாழ்ந்த சில்க் ஸ்மிதா மரணத்தில் இன்னும் மர்மம் விளங்கவில்லை. அவருடன் வாழ்ந்த அந்த தாடிக்காரர் என்ன செய்தார் என்பதும் புதிராக இருக்கிறது.
அப்போது தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதாவுடன் திடீரென காணப்பட்டார் அந்த தாடிக்காரர். அவர் பெயர் ராதாகிருஷ்ணன், டாக்டர் என்றும், கால்நடை டாக்டர் என்றும் கூறப்பட்ட நிலையில், அவர் டாக்டரே இல்லை என்றும் கூறப்படுகிறது. ஷூட்டிங், வீடு என எல்லா நேரத்திலும் சில்க் ஸ்மிதாவுடன் காணப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் சில்க் சம்பளம், கால்ஷீட், வரவு செலவு எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தார்.
அவரது அறிவுரைப்படி, தனது சம்பளத்தை கூட கறாராக பேசி, அடாவடியாக வாங்க துவங்கி, திமிர் பிடித்தவர் என்ற கெட்ட பெயரை சில்க் சம்பாதித்துக் கொண்டார். அந்த தாடிக்காரர் சில்க் ஸ்மிதாவின் அம்மா, சகோதரர் ஆகியோரையும் சந்திக்க விடாமல், அந்த சொந்தங்களையும் துண்டித்து விட்டிருக்கிறார் அந்த தாடிக்காரர். மேலும், பல நேரங்களில் கண்கள் சொருகியபடி ஒருவித போதையில் இருப்பது போல சில்க் ஸ்மிதா காணப்பட்டிருக்கிறார்.
தாடிக்காரர் ராதாகிருஷ்ணன் மகனுடன் எனக்கு திருமணம் என, டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவிடம் சில்க் ஸ்மிதா கூறிச் சென்ற சில தினங்களில், அவரது வீட்டில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்துள்ளது. கழுத்தில் காயங்களுடன் இருந்த அவர் உடல் எரிக்கப்பட்டுள்ளது. படங்கள் தயாரித்த வகையில், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு தகவல் இருந்தாலும், அவர் படங்களில் நடிக்க பெற்ற அதிக சம்பளத்தை வைத்து பார்க்கும் போது, தயாரிப்பு நஷ்டம் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் தெரிய வருகிறது.
சில்க் ஸ்மிதா வாழ்வில் திடீரென நுழைந்த அந்த தாடிக்காரர், கொஞ்ச நாட்களில் தனது கட்டுப்பாட்டுக்குள் சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்து, அவர் நினைத்தபடி எல்லாம் அவரை ஆட்டுவித்திருக்கிறார். கடைசியில், அவர் உயிரிழந்த நேரத்திலும் அவர்தான் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன, என்பது இன்றுவரை அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே இருக்கிறது.