தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம் முடிவடைந்த பிறகு தான் தனக்கு திருமணம் என்ற வாக்குறுதியை கொடுத்து விட்டதால் 45 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளார். ஒரு கட்டத்தில் நடிகர் சங்க கட்டிடமே வேண்டாம் நீங்க முதலில் கல்யாணத்த பண்ணுங்க என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. இப்படி இருக்கையில் சமீபத்தில் விஷால் தனக்கு நான்கு மாதங்களில் திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்தார். உடனே அனைவரும் அந்தப் பெண் யார் என்று இணையத்தில் அலச தொடங்கினர்.

நேற்று காலை முதலே சாய் தன்ஷிகா என்று பலரும் செய்திகளை வெளியிட்டு வந்தனர். இப்படியான நிலையில் யோகிடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கலந்து கொள்வதால் திருமணம் குறித்து அறிவிப்பும் மணப்பெண் யார் என்பது குறித்து அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன்படி இந்த இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் விஷால் தன்னுடைய வருங்கால மனைவியும் இன்றைய காதலியுமான சாய் தன்ஷிகாவுடன் கலந்து கொண்டார். அப்போது தங்கள் திருமண தேதியை இருவரும் வெளிப்படையாக அறிவித்திருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் தன்ஷிகா, இந்த இசை வெளியீட்டு விழா மேடையை என்ன மாதிரியான மேடையாக மாற்றுகிறார்கள் என்பதை இங்கு வந்ததற்கு அப்புறம்தான் புரிந்தது. நான் சினிமாவிற்குள் வந்து சுமார் 17 வருடங்கள் ஆகின்றது. இது எனக்கு முக்கியமான மேடை. என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாளை ஏற்படுத்தி கொடுத்ததற்கு கடவுளுக்கு மிகவும் நன்றி. என்னை வளர்த்த என்னுடைய மாமா அருண் கடந்த ஆண்டு தவறிவிட்டார். இந்த நாளை தான் அவர் கனவாக நினைத்திருந்தார். சினிமாவில் எனக்கான இடத்தை பிடிக்கவும் எனக்கான சரியான வாய்ப்புகள் அமையவும் போராடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நீ வாடா உன்னை வைத்து நான் படம் எடுக்கிறேன் என்று சொன்ன அந்த மாமா இன்று இல்லாதது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

இந்த படம் ஆரம்பித்து சுமார் 4, 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் உழைப்பை மட்டுமே நம்பி இருந்தேன். இந்த மேடையை அறிவிப்பு மேடையாக நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று கூறியபடியே என்ன பேபி என விசாரணை பார்த்து கேட்டார் தன்ஷிகா. தொடர்ந்து பேசிய தன்ஷிகா, இன்று காலை சில பத்திரிகைகளில் நானும் விஷாலும் காதலிக்கும் விசயம் வந்தது. இதன் பிறகும் உங்களுடன் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் பயணிக்கும் நிலையில் மறைக்க விரும்பவில்லை. நாங்க ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். எனக்கு 15 ஆண்டுகளாக விஷாலை தெரியும்.

என்னை எங்கு பார்த்தாலும் மரியாதை உடனே நடந்து கொள்வார். எனக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுத்திருக்கிறார். எனக்குத் தெரிந்து என் வீட்டிற்கு எந்த ஹீரோவும் வந்தது கிடையாது. ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை நடக்கும் போது அவர் என் வீட்டிற்கு வந்திருக்கிறார். அண்மையில் தான் நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம். அப்போதுதான் எங்களுக்கு காதல் ஏற்பட்டது. நான் அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். அவர் நல்ல மனிதர். அவரை நல்லபடியாக வைத்திருக்க வேண்டும் என்று சாய் தன்ஷிகா அந்த மேடையில் பேசினார்.
