நடிகை ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிபர் டீச்சர் என்ற கேரக்டரில் அறிமுகமானார். முரட்டு குணம் கொண்ட முட்டம் தாஸை திருத்தி, ஒரு கட்டத்தில் காதலிக்கவும் செய்வார். ரேகாவுக்கு இது அறிமுகம் படம் என்பது போல, அதுவரை வில்லனாக நடித்து வந்த சத்யராஜை ஹீரோவாக மாற்றிய படமும் இதுதான். இந்த படத்தை தொடர்ந்து ரேகா நிறைய தமிழ் படங்களில் நடித்தார். புன்னகை மன்னன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, அண்ணாமலை, செண்பகமே செண்பகமே, எங்க ஊரு பாட்டுக்காரன் என நடித்தார்.
கமல், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், ராமராஜன் போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த ரேகா, ஒரு கட்டத்துக்கு பிறகு அம்மா, அக்கா கேரக்டர்களில் நடிக்க துவங்கினார். விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றில் ரேகா பங்கேற்றார். சமீபத்தில் கூட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பிரதீப் ஆண்டனியை வெளியேற்றினார். இந்த விவகாரத்தில், ரேகா தனது அனுமதியின்றி கமல் முத்தம் கொடுத்ததாக கூறிய ஒரு பழைய வீடியோவை சிலர் வைரலாக்கி, பிரச்னையை கிளப்பி விட்டது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன், நடிகை ரேகாவின் தந்தை இறந்துவிட்டார். தன் அப்பாவின் மீது அளவுகடந்த பாசமும், அன்பும் கொண்டவர் ரேகா. தந்தையின் இழப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், கேரளாவில் அவரது கல்லறை அருகிலேயே உயிரோடு இருக்கும் தனக்கும் ரேகா, ஒரு கல்லறையை கட்டி வைத்துள்ளார். ரேகா இறந்த பிறகு, அப்பா கல்லறைக்கு அருகில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், இறந்த பிறகாவது அப்பாவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில், இந்த கல்லறையை கட்டி இருக்கிறார் ரேகா. இதை சிலர் கிண்டலாக, கேலியாக நினைத்தாலும் அப்பா மீது மகள் கொண்ட பேரன்பின் வெளிப்பாடாக நடிகை ரேகாவின் உணர்வை சிலர் பாராட்டவே செய்கின்றனர்.