நடிகை கோவை சரளா, தமிழ் சினிமாவில் மனோரமாவுக்கு அடுத்தபடியாக காமெடியில் நீண்டகாலமாக நீடித்திருக்கும் ஒரு நடிகை. 1980, 90களில் கவுண்டமணி, செந்தில், எஸ்எஸ் சந்திரன் போன்றவர்களுடன் அதிகமாக நடித்தவர். பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த சதிலீலாவதி படத்தில், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இப்போதும் ராகவா லாரன்ஸ் போன்ற முக்கிய நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன் வெளிவந்த செம்பி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். கோவைசரளா திருமணமே செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் அவர் கூறுகையில், கல்யாணம் பண்ணினவங்க எல்லாரையும் பார்த்து இப்ப சிரிச்சுட்டு இருக்கேன். எப்படி இருந்தாலும் மனுஷன் தனியாக வாழ்ந்துதான் ஆகணும். கணவர் கடைசி வரைக்கும் வரப்போறது இல்லை. எப்படியும் ஒரு கட்டத்துல பிரிஞ்சுதான் ஆகணும். கையை பிடிச்சுக்கிட்டே கடைசி வரைக்கும் வாழ முடியாது. கல்யாணம் பண்ணிட்டு கஷ்டபடறவங்களை பார்த்துதான், இப்படி கஷ்டப்படறாங்களே என்றுதான் பீல் ஆவேன். நான் கல்யாணம் பண்ணலையேன்னு பீல் பண்ணினதே இல்லை. பீல் பண்ற சீனே இங்க இல்லை.
என்னை கல்யாணம் பண்ணாம, ஒருத்தர் தப்பிச்சுட்டாருன்னு தான் எனக்கு தோணும். சின்ன வயசுல இருந்து ஆன்மீகத்துல ஒருவேளை நாட்டம் இருந்திருக்கலாம். அப்புறம், எனக்குன்னு அச்சீவ்மென்ட்ஸ் இருந்துச்சு. நாளைக்கு நாலு பேருக்கு தெரியற மாதிரி நான் வாழ வேண்டும். பெரிய அளவில் நான் கவனிக்கப்படணும்ங்கற ஆசை எனக்கு இருந்துச்சு. அந்த ஒரு நிலையில, குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி, என்னோட நோக்கமெல்லாம் ஒரே கோணத்துல இருந்துச்சு. அதனால, கல்யாணம்ங்கற அந்த பக்கமே என் கவனம் போகலை என்று சொல்லி இருக்கிறார் நடிகை கோவை சரளா.