தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது. இதனால் மழைநீர் அனைத்து இடங்களிலும் பல அடி உயரத்திற்கு தேங்கி நிற்கிறது. அது மட்டுமல்லாமல் பல இடங்களில் வீடுகளுக்குள் உள்ளூர் வெள்ள நீர் புகுந்து விட்டதால் மக்கள் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
தற்போது சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை குறைந்து வருவதால் மீட்பு நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசே இதற்கான பணிகளை முழுவீச்சில் இடைவிடாமல் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புயல் பாதிப்புக்கு உள்ளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு உதவ நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர்.
முதல் ஆளாக ஓடோடி வந்து மக்களுக்கு உதவி செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக நிவாரண பொருட்கள் வழங்க உள்ளதாகவும் சூர்யா மற்றும் கார்த்தி தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்