நடிகர் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2024ல் தீபாவளிக்கு வெளியானது. அதன்பிறகு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீரதீர சூரன் 2 படம் 2025 மார்ச் மாதம் வெளியானது. இந்த 2 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு எந்த படத்திலும் விக்ரம் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு முக்கியமான பதிவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் அந்த பதிவில் கூறியிருப்பதாவது, சில நேரங்களில் மௌனம் என்பது தன்னை தயாரித்து கொள்வது தான். என்னை ஈர்க்கும் கதைகளுக்காக காத்திருந்தேன். தற்போது நான் பெரிதும் மதிக்கும் 4 இயக்குனர்களுடன் புதிய படங்களை துவங்குவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்யாசமானவை என்று நடிகர் விக்ரம் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்த படங்களை போடி ராஜ்குமார், விஷ்ணு எடவன், இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்குகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
