CINEMA
புயலால் பாதித்த சென்னை மக்களுக்கு அள்ளிக்கொடுத்த நடிகர் மற்றும் தொழிலதிபர் சூரி.. எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை.
இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். புயலின் தாக்கத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வீடு, சாப்பாடு, ஆடை, கரெண்ட் என எதுவும் இல்லாமல் தவிக்க அரசும், தனியார் நிறுவனங்களும், பிரபலங்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். ஆனால் இன்னமும் புயலின் தாக்கம் நீங்கவில்லை என்று தான் கூற வேண்டும். புயல் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்தவுடனே சூர்யா மற்றும் கார்த்தி ரூ. 10 லட்சம், நடிகர் விஷ்ணு ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் என வெள்ள நிவாரண நிதி கொடுத்தனர்.
இந்த நிலையில் நடிகர் சூரியும் தனது சார்பிலும் தான் நடத்தி வரும் மதுரை அம்மன் உணவகம் சார்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து 10 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார். ஹீரோவாக இல்லாமல் தொழிலதிபராக நடிகர் சூரி செய்த இந்த உதவியை ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.