இன்று நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. பிரபலங்களும், பொதுமக்களும் காலை முதலே வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். முன்னணி பிரபலங்களான ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, குஷ்பு, ஆண்ட்ரியா, த்ரிஷா, வெற்றிமாறன், பா.ரஞ்சித், அனிருத் உள்ளிட்ட பலரும் வாக்கினை பதிவு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இவர்களைப் போலவே நடிகர் சூரி, தன்னுடைய வாக்கினை செலுத்த, மனைவியுடன் சேர்ந்து வாக்கு சாவடிக்கு சென்றார். அப்பொழுது நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு போய் விட்டதாக கூறி இந்த முறை அவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து,தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு நடிகர் சூரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, ‘ என்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றவே வாக்களிக்க வந்தேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் வாக்களித்து வருகிறேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு போய் விட்டதாக கூறுகிறார்கள். என் மனைவியின் பெயர் மட்டும் உள்ளது. அவர் மட்டும் வாக்களித்துள்ளார். ஓட்டு போட வந்து, ஓட்டுப்போடாமல் செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. எனினும் அனைவரும் தங்களின் ஓட்டை 100 சதவீதம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram