தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக “முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?”, “அவருக்குப் பேசத் தெரியவில்லையா?” என்று எழுந்த ஒட்டுமொத்த விமர்சனங்களுக்கும், இன்று அவர் ஆற்றிய அதிரடியான உரை ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. திமுகவின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குத் தனது பாணியில் பஞ்ச் டயலாக்குகள், குட்டிக்கதை மற்றும் புள்ளிவிவரங்களுடன் முதல்வர் விஜய் பதிலடி கொடுத்த விதம் அரசியல் வட்டாரத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் அதிரவைத்துள்ளது. கடந்த 40 நாட்களில் தனது அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு அவர் பேசியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிகழ்வு, இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி ட்ரெண்டாகி வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நடிகர் ஷாம் முன்பு ஒரு நேர்காணலில் விஜய் குறித்துப் பேசிய கருத்துக்களை ரசிகர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். “சிஎம் விஜய் சட்டசபையில் அமைதியாக இருந்ததற்கு காரணம் அவர் பேசத் தெரியாததால் இல்லை; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஸ்பேஸ் கொடுக்கத்தான், விஜய்க்கு இதை முடிக்க இரண்டு நிமிடம் போதும்” என்று ஷாம் குறிப்பிட்டிருந்தார். ஆரம்பத்தில் விஜய் பேசக்கூடாது என்று விமர்சித்தவர்கள், பின்னர் அவர் அமைதியாக இருக்கிறார் என்று அதையே பேசுபொருளாக்கியதைச் சுட்டிக்காட்டிய ஷாமின் வரிகள், விஜயை ஆழமாகப் புரிந்துகொண்ட ஒருவரின் யதார்த்தமான பேச்சு என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
விஜயின் இந்த திடீர் அதிரடிக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் நேற்றைய பேச்சும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. “விஜய் அமைதியாக இருப்பது அவரது பலவீனம் இல்லை” என்று எஸ்.ஏ.சி தனது மகனுக்கு ஆதரவாகப் பேசியிருந்த நிலையில், இன்று சட்டசபையிலேயே விஜய் நேரடியாகக் களம் இறங்கிப் பதிலடி கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த தமிழக மக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக (TVK) தொண்டர்கள், “நேற்று அப்பா பதில் சொன்னார்… இன்று மகன் சட்டசபையிலேயே செயலில் காட்டிவிட்டார்” எனத் தங்களது மகிழ்ச்சியை இணையத்தில் பதிவிட்டு அனல் பறக்க விட்டு வருகின்றனர்.
ஒட்டுமொத்தத்தில், இன்று சட்டசபையில் நடந்த சம்பவங்கள் “விஜய் அமைதியாக இருந்தது தன்னம்பிக்கை இல்லாததால் அல்ல; மாறாக எதிர்த்தரப்பை முழுமையாகப் பேசவிட்டு, சரியான நேரத்தில் சரியான பதிலடி கொடுக்கக் காத்திருந்த வியூகம் தான்” என்ற நரேட்டிவை உறுதிப்படுத்தியுள்ளது. 60 வருடங்களாகப் பேசியே நாட்டை கெடுத்துவிட்டார்கள் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு, சரியான நாளில் ஒற்றை உரையின் மூலம் ஒட்டுமொத்த அரசியலையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் முதலமைச்சர் விஜய்.
