தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் முன்னணி நடிகரான வடிவேலு, தனக்கென ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரின் நகைச்சுவை காட்சிகளுக்கு உறுதுணையாக அவரோடு ஒரு குழுவே இருந்தது. அதில் ஒருவர்தான் சார்ப்பாம்பு சுப்பராஜ்.
மருதமலை படத்தில் இடம்பெற்ற காமெடிக் காட்சியில் அவர் சாரப்பாம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் இந்தப் பெயரை பெற்றார். வடிவேலுவோடு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுப்பராஜ், அவர் காமெடிக் காட்சிகளுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
ஆனால் சுப்பராஜ் நடிகர் மட்டுமில்லை. அவர் இயக்குனர் ஆகும் ஆசையோடுதான் சினிமா உலகுக்கு வந்துள்ளார். 1977-இல் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றினார். பாரதிராஜாவிடம் இவரை உதவி இயக்குனராக கவியரசு கண்ணதாசன் தான் சேர்த்துவிட்டுள்ளார்.
அதன் பின்னர் பலப் படங்களில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். 18 இயக்குநர்களிடம் 49 படங்கள் துணை இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பின்னர் நடிகர் ராஜ்கிரண் கம்பெனியில் 13 வருடங்கள் பணிபுரிந்தார். அதன் பின்னர்தான் அவருக்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ‘புண்ணியவதி’ என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகன் இறந்ததால் அப்படம் முடிக்கப்படாமல் வெளிவராமலேயே நின்றுபோனது.
இதன் பின்னர் ஏழு ஆண்டுகள் வாய்ப்புகள் எதுவுமின்றி கஷ்டப்பட்டார். இதன் பின்னர்தான் ‘ராஜஸ்தான்’ என்ற படத்தில் நடிகர் வடிவேலுவுக்கான காட்சிகளுக்கு வசனம் எழுதினார். அதன் பின்னர் வடிவேலுவின் அறிவுரைப்படி அவருடனேயே நடித்து மிகவும் பிரபலமானார்.