சமீபகாலமாக நடிகர் ரவி மோகன் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அவர் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக இன்னும் 20 நாட்கள் அவர் நடிக்க வேண்டும். ஆனால் கடந்த 4 மாதங்களாக அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே செல்லாமல் இருந்து வருகிறார். இதற்கு பல காரணங்களை சொல்லி படக்குழுவினரை காத்திருக்க செய்கிறார்.
படத்தின் நாயகிக்கும் நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழி கெனிஷாவுக்கும் ஏற்பட்ட மறைமுக மோதல்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தோழி கெனிஷா இல்லாமல் எங்கும் செல்லாத நடிகர் ரவி மோகன், கராத்தே பாபு ஷூட்டிங்குக்கும் செல்லாமல் இருக்கிறார். அதனால் இந்த படத்தை இன்னும் எடுத்து முடிக்கவில்லை. ஏற்கனவே திட்டமிட்ட ரிலீஸ் தேதியும் தள்ளிப் போய்விட்டது.
அதனால் கராத்தே பாபு படத்தை 32 கோடி ரூபாய் விலை கொடுத்து டிஜிட்டல் உரிமம் வாங்கிய ஜீ 5 ஓடிடி தளம் இந்த படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. இந்த படம் வேண்டாம் என்றும் தெரிவித்து விட்டது. இதனால் கராத்தே பாபு படத் தயாரிப்பாளருக்கு 32 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
