டௌசர் பாண்டி எனும் பாரி வெங்கட்.. ஒரே படத்தில் ஓஹோ புகழ்.. வடிவேலுவுக்கே டஃப் கொடுப்பவரின் ஏற்பட்ட சோகம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை காட்சிகள் காலம் கடந்தும் ரசிகர்களை சிரிக்க வைப்பவை. எப்படி காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா கதாபாத்திரத்துக்கு நாகேஷ் கதை சொல்வது இன்று பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறதோ அதுபோல ஒரு காட்சிதான் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற ஐஸ் ஹவுஸ் மணிக்கூண்டுக்கு வழி சொல்லும் காட்சியும்.

அந்த காட்சியில் தன்னுடைய தனித்துவமான சென்னை பாஷையால் கவனம் ஈர்த்தவர் நடிகர் பாரி வெங்கட். அந்த படத்தில் டவுசர் பாண்டி எனும் சோப்ளாங்கி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பாரி வெங்கட். அந்த காட்சி படம் வெளியானதும் மிகப்பெரிய ஹிட்டானதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

   

தான் பெரிய நடிகராக இல்லாவிட்டாலும் தன்னோடு பயணித்த சினிமாவில் வர ஆசைப்பட்ட பல நடிகர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யும் குணம் கொண்டவராம் பாரி வெங்கட். இதை சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் அவரோடு நெருங்கி பழகிய நடிகர் காக்கா கோபால் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்தார். அதனால் பிஸியான நகைச்சுவை நடிகராக உருவாக ஆரம்பித்தார். பிஸியின் உச்சத்தில் இருந்த பாரி வெங்கட் திருநெல்வேலி படத்தின் படப்பிடிப்புக்காக நெல்லை சென்று விட்டு ஆம்னி பஸ்ஸில் சென்னை திரும்பியபோது விபத்தில் மரணமடைந்தார்.

அவரின் உடலை மீட்ட சக நகைச்சுவை நடிகர்கள் சென்னைக்கு எடுத்துவந்து நல்லடக்கம் செய்துள்ளனர். அவரின் குடும்பத்துக்கு விஜய் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். சினிமாவில் நன்றாக வரவேண்டிய நடிகர் பாரி வெங்கட் எதிர்பாராத விபத்தால் அல்பாயிசில் இறந்தது தமிழ் சினிமாவுக்கு இழப்பாக அமைந்தது.