சிவாஜி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க எம்.ஜி.ஆர் போட்ட ஜாலி டிராமா.. செம்ம மாஸான சம்பவம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

அதே போல திரைப்படத்திலும், அதற்கு வெளியிலும் தன்னுடைய இமேஜ் எப்படி இருக்க வேண்டும் என்பதில் எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். குழந்தைகள் மற்றும் தாய்மார்களிடம் அளவில்லாத அன்பை கொடுக்கும் இளைஞராகவும், ஏழை எளியவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வள்ளலாகவும் தன்னைக் கட்டமைத்துக் கொள்வார்.

   

இந்நிலையில் சிவாஜி ரசிகர்களை தன் பக்கம் இழுப்பது போல எம் ஜி ஆர் நடந்து கொண்ட சம்பவம் சிவாஜிக்கே கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தியதாம். ஏதோ ஒரு படத்துக்காக சிவாஜி சத்யா ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரைப் பார்க்க வெளியூரில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர். ஆனால் ஷுட்டிங் நடந்ததால் ரசிகர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என ஸ்டுடியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த எம் ஜி ஆர்,  கூட்டம் நிற்பதைப் பார்த்து என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார். ஸ்டுடியோ காரர்கள் விஷயத்தை சொல்ல, உடனே காரில் இருந்து இறங்கிய எம் ஜி ஆர், ரசிகர்களை அழைத்துக் கொண்டு ஸ்டுடிஓ உள்ளே சென்றுள்ளார். எம் ஜி ஆர் வருவதை அறிந்ததும் சிவாஜி ஓடிவந்து வரவேற்றுள்ளார்.

அப்போது சிவாஜியிடம் “உன்னுடைய ரசிகர்களாம். வெளியூரில் இருந்து வந்துள்ளார்கள். உன்னைப் பார்க்க, அதுதான் அழைத்து வந்தேன்” என சொல்லிவிட்டு ரசிகர்களுக்கு விடைகொடுத்துவிட்டு சென்றுள்ளார். எம் ஜி ஆரின் இந்த செயல் சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது. இப்படி ஒரு நடிகரா என வியந்து பார்த்துள்ளனர்.

ரசிகர்களும் சிவாஜியை சந்தித்துவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் போனபின்னர் சிவாஜி  தன்னருகே இருந்தவரிடம் “எப்படி என் ரசிகர்களையும் அவர் பக்கம் இழுக்க பார்க்கிறார் பார்த்தாயே. வந்தவன் எத்தனை பேரு ஊருக்கு போய் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்துல சேரப் போறானோ” என ஜாலியாகப் புலம்பினாராம்.