நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவரைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய தொகுதிகளிலும் அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். ஆனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சியினர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், கடந்த 20 நாட்களாகத் தொகுதி மக்களிடையே தமக்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தாலும், நிலவும் கடும் நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு சூழல்கள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தான் போட்டியிட்ட லால்குடி தொகுதி மட்டுமின்றி, மற்ற மூன்று தொகுதிகளின் வேட்பாளர்களும் விலகுவதாகவும், திமு கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்பதே தனது பிரதான நோக்கம் என்று கூறிய அவர், ஒன்றிய அரசுடன் அதிமுக, விஜய் மற்றும் சீமான் ஆகியோர் மறைமுகக் கூட்டு வைத்துள்ளதாக விமர்சித்தார். தமிழகத்தைப் பாதுகாக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமியால் பதில் சொல்ல முடியவில்லை என்றும் அவர் சாடினார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் தன்னை அழைத்த போதிலும், தற்போதைய அரசியல் சூழலில் திமுக வேட்பாளர்களின் வெற்றியே அவசியம் என்பதால் இந்த ஆதரவு முடிவை எடுத்துள்ளதாக மன்சூர் அலிகான் விளக்கமளித்தார்.
