“கரண்ட் இல்லைனா என்ன..? 6 மாசம் அட்ஜஸ்ட் பண்ணுங்க…!” – நடிகர் மகேந்திரனின் பேச்சால் கொதிக்கும் நெட்டிசன்கள்…!!

By Swetha on ஆனி 15, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மகேந்திரன். குழந்தை பருவத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், கதாநாயகனாக தனக்கான ஒரு நிலையான வெற்றியைப் பெற போராடி வரும் இவர், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணல் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேர்காணலில் தமிழகத்தின் தற்போதைய மின்வெட்டுப் பிரச்சனை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மகேந்திரன், “மின்சாரத்துடன் இவ்வளவு நாள் ஜாலியாக இருந்தவர்கள் ஒரு ஆறு மாதம் அது இல்லாமல் இருக்க முடியாதா? என் வீட்டில் இருந்து கூட மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், சோலார் வழியாக எடுத்துக்கொள்ளுங்கள், கேள்வி கேட்காதீங்க. முதல்வரை கேள்வி கேட்பதால் உடனே மின்சாரம் வந்துவிடுமா? ஆறு மாதம் எதுவும் கேட்காதீங்க, எதாவது கேட்டுகிட்டே இருக்கீங்க” என்று மிக அலட்சியமாகப் பேசினார். மக்களின் அத்தியாவசியத் தேவையான மின்சாரம் குறித்து, பொறுப்பற்ற முறையில் அவர் பேசிய இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

   

இவரது இந்த பேச்சுக்கு பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சாதாரண நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மின்வெட்டால் படும் துயரங்களையும், வெயிலின் தாக்கத்தையும் அறியாமல், ஒரு ஏசி அறையில் அமர்ந்துகொண்டு மகேந்திரன் இப்படிப் பேசுவது கண்டிக்கத்தக்கது என பலரும் சாடி வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி கேட்பது ஜனநாயக உரிமை என்றும், அதைத் தட்டிக்கழிக்கச் சொல்வது அறியாமை என்றும் கூறி மகேந்திரனின் கருத்துக்கு எதிராக தங்களது கண்டனங்களை இணையத்தில் தீவிரமாகப் பதிவு செய்து வருகின்றனர்.