தமிழ் சினிமாவில் பல வருடங்களாக துணை கதாபாத்திரங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருப்பவர் தான் பிளாக் பாண்டி. சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சினிமாவை பொருத்தவரை இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அங்காடி தெரு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படத்திலும் சிறப்பான பெயரை பெற்றார்.

இப்படி நல்ல நடிகர் என்று அடையாளம் இருந்தாலும் இவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை. மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் நடிப்பின் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்ததால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்படி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாகேஸ்வரி மற்றும் ஆட்டோகிராப் என வரிசையாக இவர் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இவருக்கு துணை கதாபத்திரங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் படியான ரோல்கள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

இறுதியாக விஜயின் கோட் திரைப்படத்தில் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது இஎம்ஐ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நானும் அஜித் விஜய் போல சம்பாதித்துக் கொண்டே இருப்பேன் என நினைக்கிறார்கள். ஆனால் சூழ்நிலை அப்படி கிடையாது. பல நெருக்கடியில் தான் இருக்கிறேன். நான் இப்படித்தான். நான் என்ன பொய்யா சொல்லப் போகிறேன்.

சாட்டை படத்தில் நடித்ததற்கு பிரபு சாலமன் எனக்கு சம்பளமே தரவில்லை. அப்படி இருக்கும்போது நான் அவரை நிச்சயமாக திட்ட தான் செய்வேன். ஒன்றுமே இல்லாதவனுக்கு நீங்கள் வாய்ப்பு தந்தால் பரவாயில்லை. நான் ஒரு இடத்திற்கு வந்து விட்டேன். அப்படி இருக்கும்போது நீங்கள் சம்பளம் தர மறுப்பது நியாயமான விஷயம் கிடையாது. வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு ஏமாத்த கூடாது என்று பிளாக் பாண்டி பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சுக்கு விளக்கம் அளித்திருக்கும் பிரபு சாலமனின் மகள், தனது தந்தை தயாரிப்பாளரே இல்லை. அவர் அந்த படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியதாகவும் தயாரிப்பாளர் அவரையே ஏமாற்றி விட்டதாகவும் கூறி விளக்கம் அளித்துள்ளார்.
